Tuesday 16 October 2012

வித்துவசிரோமணி பிரம்மஸ்ரீ சி.கணேசையா-பாகம் 3

ஐயர் அவர்கள் தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியாகிய உருவும் திருவும் நிறைந்த அன்னலட்சுமி அம்மையைத் திருமணம் செய்தவர்.அம்மையாரும் வடமொழி தென்மொழி அறிவுடையவர்.நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர்.இல்லற வாழ்கையின் பயனாக அவர்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைத்திலது.மனைவியார் இறந்தபின் ஐயர் அவர்கள் மனைவியார் அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு அன்னலட்சுமி கூபம் எ எனப் பெயரிட்டு வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனைத் தருமசாசனம் பண்ணியிருக்கிறார்கள்.அவ்வாலயத்துக்கு,முன்னே பலர்,பலமுறை தீர்த்தக்கிணறு தோண்டுவிக்க முயன்றும் அவற்றில் நீரூறாமையால் அப்பணியைக் கைவிட்டிருந்தனர். ஐயர் அவர்கள் வெட்டுவித்த கிணறும் நாற்பது அடிவரை அகழப்பட்டும் நீருற்றிலது. ஐயரவர்கள்,

ஆட்டாதே எங்கள் அரனார் திருமகனே
கோட்டாலே குத்தியிந்தக் கூபமதை -நாட்டிடுவாய்
மாமருதி லீசா மதமா முகத்தோனே
காமுறுவேற் குள்ளம் கனிந்து

என்று பாடியும் பணிந்தும் விநாயகப் பெருமான் திருவடிகளை நம்பி,தம்பணியைத் தொடர்ந்து செய்து நீருறக்கண்டு மகிழ்ந்தனர்.அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உளது.ஏனைய சொத்துகளையும் ஐயர் அவர்கள் தம்மினத்தில் உரிமையாளருக்குக்  கையளித்து பொருட்பற்றினும் நீங்கி உள்ளத் துறவியாய்,மருதடி விநாயகர் ஆலயமருங்கில் ஓர் ஆசிரமம் அமைத்து அதில் வதிந்து,தமிழாராய்ச்சி செய்து கொண்டும்,விநாயகரை வழிபட்டுக் கொண்டும் வாழ்ந்தார்கள்.தேகவியோகமெய்தியதும் இவ்வாசிரமத்தின் கண்ணேயாம்.

துறவு வாழ்க்கை மேற்கொண்ட ஆரம்ப காலத்தில் ஐயரவர்கள் தமிழ்ப்பற்றைத் துறந்தாரல்லர்.புலவரிடம் தொடர்பு கொண்டிருந்த காலத்தில் ஆற்றிய தமிழ்ப்பணியைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார்கள்.ஆரம்ப காலத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டு வந்த செந்தமிழ் என்ற சீரிய பத்திரிகையில் ஐயர் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்தன.ஐயரவர்களின் பரந்த நூலறிவையும்,நுண்மதியையும் வெளிப்படுத்திப் பெரும்புகழ் ஈந்தன.அக்காலத்தில் தென்இந்தியாவில் பெரும் புலவர்களாக விளங்கிய சேது சமஸ்தானம் மகாவித்துவான் ரா.இராகவையங்கார்,மு.இராகவையங்கார்,நாராயணையங்கார் என்பவர்கள் ஐயரவர்களிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தனர்.அக்காலத்தில் அதி தீவிர விவேகமும் நுண்மாண் நுழைபுலமும் பெற்று,பண்டைய நூலாசிரியர் உரையாசிரியர்களின் கருத்துக்களை மறுத்து,தம்மை மறுப்பார் கருத்துக்களையெல்லாம் வழிகெடுத்து நவீன உரை கூறும் திறம்படைத்து,தொல்காப்பியத்தின் பாயிரத்துக்கும் முதற் சூத்திரத்துக்கும் 'சண்முக விருத்தி' என்னும் பெயரில் புத்துரைகண்ட சோழ வந்தான் வித்துவான் அரசன் சன்முகனாருக்கும் ஐயரவர்களுக்கும் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் என்ற விடயத்தில் கருத்து வேறுபாடு தோன்றிற்று.
அரசன் சண்முகனார், ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் வேறு என்றும்,ஐயரவர்கள் அவையிரண்டும் ஒன்றென்றும் வாதிட்டனர். அவர்களது வாதங்கள்,'செந்தமிழ்'பத்திரிகையில் தொடர்ந்து பிரசுரமாயின.அவை பேரறிஞர்களின் கருத்தைக் கவர்ந்தன.ஈற்றில் ஐயரவர்களின் கருத்தே தக்கதென்பது அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.அவ்வாத முடிவு அவர்களுக்கு மிகுந்த புகழைத் தேடிக் கொடுத்தது.சென்னை அருள் நெறிக் கழகத் தலைவர்க்கு மாறாக எழுதிய கண்டனமும் அங்ஙனமே புகழை மிகுவித்தது.கவியின்பம்,ஒரு செய்யுட் பொருளாராய் ச்சி,நச்சினர்க்கினியார் உரைநயம்,இராமாயணச் செய்யுட் பாடாந்தரம்,அளபெடை,போலி எழுத்து,தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி,பிறிது பிறிதேற்றல்,ஆறனுருபு பிறிதேற்றல்,இருபெயரெட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும்,தொகை நிலை,சிறுபொழுதாராய்ச்சி என்ற தலையங்கங்களில் எழுதிய கட்டுரைகளும் அறிஞர்க்கு விருந்தாயின.