Tuesday 6 November 2012

வித்துவசிரோமணி பிரம்மஸ்ரீ சி.கணேசையா-பாகம் 6

இந்நாளில் பண்டிதர்கள்,வித்துவான்கள்,புலவர்களாக விளன்குபவரிற் பலர் ஐயரவர்களிடத்திற் பாடங்கேட்டவர்களே ஆவர்.ஆசிரிய கலாசாலைகள்,பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்களும்,மாணவர்களும் எனிட கல்விமான்களும் இடையிடை ஐயரவர்களைச் சந்தித்துத் தமக்கேற்பட்ட ஐயங்களைப் போக்கிக் கொண்டதுண்டு.நாள்தோறும் மாலைவேளையில் முருதடி விநாயகர் ஆலயச் சூழலிலுள்ள ஆலமர நிழலில் இருந்து மாணவர் சிலருக்குப் பாடஞ்சொல்லி வந்தனர்.மாணவர் சித்திரப்  பாவையின் அத்தகவடங்கி  இருந்து பாடங்கேட்டலே நல்லது என்ற கருத்துள்ளவர் ஐயரவர்கள்.பராக்குப்பார்த்தல்,சிரித்தல்,வீண்கதை பேசல்,தொடர்பில்லாத வினாக்களை வினவல்,சோர்ந்திருத்தல் முதலான குற்றங்களை மாணவர் புரியின் மிகக் கோபிப்பார்கள்.சிறிது அசைந்தாலும் அஃதென்ன என்று கேட்பார்கள்.அதனால் எறும்பு கடித்தாற்கூட மாணவர் அசையாதிருந்து பாடங்கேட்பார்.தமக்கு எறும்பு கடித்தாலும் அதனை மெல்ல எடுத்துத் தன்பாட்டிலே போக விட்டுவிடுவார்கள்.அதனைக் காணுகின்ற மாணவர்கள் தாமும் அங்கனமே செய்வர்.இலக்கண நூல்களைச் சிரமப்படாது விளக்கிக் காட்டுவார்கள்.சங்க இலக்கியங்கள் கற்பிக்கும் போது அப்புலவர்களின் புலமையை வியந்து மெய்மறந்து புகழுவார்கள்.பல நூற்பயிற்சியும்,நுண்ணறிவும் கொண்ட ஐயரவர்களிடம் பாடம் கேட்பது பெரும் பேறெனவே மாணவர் கருதுவர்.மாணவரிடம் பணத்தையோ பொருளையோ எதிர்பார்க்க மாட்டார்கள்.சிலபோது தமக்குத் தேவை ஏற்படின் பொருள் வசதியுள்ள மானவர்கள் சிலரிடம் கடனாகப் பணம் வாங்கி அதனை மறந்து போகாது அப்பனத்தினும் பெறுமதி கூடிய நூல்களை அவர்களுக்கு வழங்கிவிடுவார்கள்.

கல்வி வன்மையால் புகழ் சம்பாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுவார்கள்.'உன்னுகின்றனை உனைமணோர் பெரியனென் றுணருமாசெய' எனவரும் பாடலை எடுத்துக் காட்டி "இறைவனை வணங்கு,அவர் உன்னை உலகத்தவர் பெரியன் என்று சொல்லுமாறு செய்வன்" என்பார்கள். அவர்கள் கற்பியாது விட்டாலும் அவர்கள் முன்னிலையில் இருப்பதே பெருங்கல்வியைத் தரும்.ஆசிரிய இலக்கணம் பலவும் நிறைந்த அவர்களின் மாணவர்கள் பலரிடம் அவர்களின் அடக்க குணம் பொருந்தி இருத்தலை இன்றும் நாம் காணலாம்.

துறவுநிலை ஏற்பட்ட ஆரம்பகாலத்தில் தமிழ்ப்பற்று நீங்காத ஐயரவகளுக்குப் பிற்காலத்தில் அப்பற்றும் நீங்குவதாயிற்று.முன் பொருட்பற்று நீங்கியிருந்தார் என்பது மனவியிறந்தபின் தமது சொத்துக்களை இனத்தவருள் உரினையாலர்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு,மருதடி ஆலய மருங்கில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்தார் என்பதனாற் காட்டப்பட்டது.மேலும்,பொற்கிழி வழங்கப்பட்டபோது அப்பணத்தை ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலயம்,வருத்தளைவிளான் மருதடி விநாயகர் ஆலயம் என்பவற்றின் திருப்பணிக்காகச் செலவு செய்தார் என்பது பலரறிந்தது,தமக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடையைப் போர்க்கப்பட்ட அந்நேரத்தன்றிப் பின் ஒருபோதும் அணிந்திலர்;தம்மினத்தவர் ஒருவருக்கே வழங்கிவிட்டனர்.தேவைக்கு மிஞ்சிப் பணம் வைத்திருந்தறியார்.ஊரிலும் பிற ஊர்களிலும் ஐயரவர்களுக்குப் பொருள் வழங்கப் பலர் இருந்தனர்.அவர்கள் பணம் வழங்க முற்படும்போது "இருக்கட்டும் தேவையானபோது கேட்டுப் பெற்றுக் கொள்கிறேன்"என்பார்கள்.தேவைக்கு அவர் கேட்டுப் பெற்றதும் உண்டு.பணங்கருதிப் படிப்பித்தார் அல்லர் என்பதும் முன் காட்டப்பட்டது.சிவபூசை செய்தன்றி உணவு கொள்ளாத ஐயரவர்கள் ஓய்வு நேரங்களிலெல்லாம் மருதடி விநாயகர் ஆலயத்தைப் பிரதட்சணம் செய்து வணங்குவார்கள்.விநாயகர் முன்னிலையில் தியானத்தில் இருப்பார்கள்.நடுச்சாமத்திலும் ஐயரவர்கள் தியானத்தில் இருப்பதைக் கண்டவர் எம்மூறிற் பலர்.