Friday 16 November 2012

சிரங்குவிவார்

 கரங்குவிவார் உண்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

என்ற திருவாசக அடிகளுக்குக் கையினை நெஞ்சின் நேரே கூப்புவார் மனம் மகிழுதற்குக் காரணமான இறைவனின் பாதங்கள் வெல்வன ஆகுக.அக் கைகளைத் தலையிலே வைத்து வணங்குவாரை உயர்விக்கும் சீரினை உடைய இறைவனுடைய பாதங்கள் வெல்வனவாகுக
என்று சாதாரணமாகப் பொருள் கொள்ளப் படுகிறது.அங்ஙனம் பொருள் கொள்வது பொருத்தமானது
போலத் தெரியவில்லை.

கரங்குவிவார் என்பதில் குவிதல்வினை கரத்துகுரியது.சிரங்குவிவார் என்பதில் குவிதல்வினை சிரத்திற்குரியது;கரத்திற்குரியதன்று.கரங்குவிவார் என்ற தொடரில் இன்ன இடத்துக்கு நேரே என்றாவது இன்ன இடத்தில் வைத்து என்றாவது இடஞ் சுட்டிக் கூறப்படவில்லை.ஆதலால்,சிரத்திலே வைத்துக் கைகுவித்தலையும், இவ்வொரு தொடரில் வைத்துக் கொள்ளலாம்.எனவே, சிரங்குவிவார் என்பதற்கு வேறு பொருள் கொள்ளுதல் வேண்டும்.

'கவிசெந்தாழிக் குவிபுறத் திருந்த செவிசெஞ் சேவல் '

என்ற செய்யுட் பகுதியில் குவிபுறம் என்றது தாழியினது வளைந்த புறத்தை ஆதலின் குவிதல் என்பது வளைதல் என்ற பொருளைத் தருதல் பெறப்படும்.எனவே சிரங்குவிவார் என்பதற்குத் தலைவளைவோர் அதாவது தலை வணங்குவோர் என்று பொருள் கொள்ளலாம்.

தலைபணிந்தோரைத் தலைநிமிரச் செய்வான் இறைவன்.

'இறுமாந்திருப்பன் கொலோ ஈசன்பல்கணத் தெண்ணப்பட்டிச்
சிறுமான் ஏந்திதன் சேவடிக்கீழ்ச் சென்றங் கிறுமாந்திருப்பன்கொலோ '

என்றருளினார் அப்பரடிகளும். 'ஒருநீயாகித் தோன்ற' என்றது திருமுருகாற்றுப்படை.

'சைவநீதி' ஈசுர ஆவணி 1997.