Friday 16 November 2012

இராறுதோள்

 கந்தபுராணத்திலே மூவிரு முகங்கள் போற்றி என்றோர் அறுசீர் ஆசிரியவிருத்தம் வருகிறது.அதில் முதலாம் அடியில் நாலாம்சீர் முகம்பொழி என நிரையும் நிரையும் சேர்ந்த ஈரசைச் சீராய் அமைகிறது.
அதற்கியைய இரண்டாம் அடியின் நாலாம் சீரும் நிரைநிரையாக அமையின் ஓசை சிறக்கும்.

அதனால் கட்சியப்பசுவாமிகள் அச்சீரை ஈராறுதோள் என்று அமையாது,செய்யுள் செய்யும்போது ஆசிரியன் வேண்டுமிடத்து நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்கலாம்(குறுக்கல்) என்ற உரிமையால் 'ஈ'என்ற எழுத்தை 'இ' ஆகக் குறுக்கி இராறுதோள் என நிரைநிரைச் சீராக அமைத்தனர்.

அச்செய்யுளைப் பாடுவோர் சிலர் இராறுதோள் என்பதைப் பிழையென்று கருதிப்போலும் ஈராறுதோள் என்றே பாடுகிறார்கள்.அவர்கள் ஈராறுதோள் என்று பாடுகையில் ஓசை நீண்டு போதலே ஈராறு என ஒரு சீர்கொண்டு,தோள் என்பதை வேறு பிரித்து,அது தனியசையாதலின் அதற்கு கள் என்ற விகுதி கொடுத்துத் தோள்கள் என ஈரசைச்சீர் ஆக்குகின்றனர்.அதனால் தோள்கள் என்பது ஐந்தாம் சீராக,அடுத்துவரும் போற்றி என்ற சீரோடு அவ்வடி நிறைவுறுகின்றது.இறுதியில் நின்ற காஞ்சி என்பது அங்கும் சேராமல் இங்கும் சேராமல்,நிற்க,எப்படியோ சமாளித்துப் பாடி முடிக்கின்றனர்.அதனை
'இராறுதோள் போற்றி காஞ்சி' என்று பாடுவதே தக்கது.

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

இது போலவே பரமனைமதித்திடா என்ற புராணப்பாவில் மூன்றாம் அடியின் கடைசிச்சீரைத் தண்டமும் என்று பிழையாகப் பாடுவோரும் உண்டு.ஒரு தலை கிள்ளலும்,குருதியும் அகந்தையும் கொள்ளலும் தண்டங்களாக,பின்னும் தண்டமும் புரிதரு வடுகன் என்னல் ஆகாது.ஆகுமேல்,முற்கூறிய இரண்டும் தண்டங்கள் ஆகா என ஆகும்.ஆதலின் 'தண்டமுன் புரிதருவடுகன்' என்று பாடங் கொள்ளுவதே தக்கது.

பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியு மகன்தையுங் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவோம்.

'சைவநீதி', ஈசுர புரட்டாதி 1997